"ஜனாதிபதி தேர்தலுக்கு முன், மாகாண சபைத்தேர்தல்" நிலைப்பாட்டில் மாற்றமில்லை

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் பழைய முறையின் கீழ் ஒரே தடவையில் நடாத்துவதற்கான தனது அமைச்சரவை திருத்தம் குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இந்த பரிந்துரைகளை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடாத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவை திருத்த பத்திரமொன்றை தாக்கல் செய்திருந்தார்.இவ்வாறு ஜனாதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை திருத்தப் பத்திரம் தொடர்பான பரிந்துரைகளை கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிப்பதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜிர அபேவர்தன தெரிவித்திருந்த போதிலும், கடந்த வாரம் அதனை சமர்ப்பித்திருக்கவில்லை.

இந்த நிலையில், குறித்த பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக ஒரு வார கால அவகாசத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கோரிய நிலையில்,இந்த வாரம் கட்டாயம் பரிந்துரைகளை சமர்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த பின்னணியில், அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடாத்துவதற்கான அமைச்சரவை திருத்தப் பத்திர பரிந்துரைகள் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.