சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்; சிந்தனையில் முடியாதே!


ரூமி அக்ரம்-

பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்தும் சாணக்கியம், எவ்வாறு எமது சமூகத்தைப் பாதுகாக்கும் என்பதில்தான், இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை அதிக அக்கறையுடன் செயற்படுகிறது.

*தேசிய ஐக்கியம் - சமூக நல்லிணக்கம் என்பவற்றுக்காக, பேரினவாதத்திடம் ஒட்டுமொத்தமாகச் சரணடைய முடியாது.* *'ஒத்துழைத்தல், இணங்கிப்போதலூடாகவே இவற்றைச் சாதிக்கலாம்'* என்பதே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிலைப்பாடாகும். இதனைக் கருத்திற்கொண்டு களமிறங்குவதற்கே வியூகம் வகுக்கப்படுகிறது.

இவ்வியூகங்களின் வெற்றிக்கு கட்சியின் வாக்குப்பலம்தான் வழிகோலும். எனவே, கட்சியின் வாக்காளர்கள் சோரம்போவதற்கும், விலைபோவதற்கும் இம்முறை இடமளிக்கக்கூடாது.

மக்கள் காங்கிரஸ் தலைமையின் இவ்வியூகங்களை விலைகொடுத்து வாங்குவதற்கு, பல தரகர்களும் முகவர்களும் களமிறக்கப்பட்டுள்ளதும் இதற்காகத்தான். *ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுவிட்டதற்காக, பாராளுமன்றத் தேர்தலிலும் தோற்க வேண்டும் என்று பேரினவாதம் நினைப்பதேன்?*

எமது மக்களை விலைபோகும் வியாபாரப் பண்டங்களாகக் கணித்துள்ள இவர்களுக்கு, பாடம்புகட்டுவது அவசியம். இதற்குத்தான் இத்தேர்தலைப் பயன்படுத்துமாறு, சிறுபான்மை மக்களிடம் தலைவர் ரிஷாட் கோருகிறார்.

கடந்த அரசாங்க காலத்தில் செய்யப்பட்ட அத்தனை அபிவிருத்திகளையும் மோசடிகளாகக் காட்ட முனையும் இப்பேரினவாதிகள், *ஒரு அடி நிலத்தையும் எமது மக்களுக்கு வழங்குவதற்கு மனமில்லாத கஞ்சர்களே!* இவர்களுடன் சரணாகதி அரசியல் செய்யாது, சாத்வீக அரசியல் செய்வதுதான் எமது மக்களை வாழவைக்கும். ரிஷாட்டின் தைரியங்கள் ஒருபோதும் எம்மைத் தனிமைப்படுத்தாது.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், எமக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை அரசியல் மூலதனமாக்கி, முஸ்லிம்களை அடிமைப்படுத்த எத்தனிக்கும் ஆக்கிரமிப்புச் சித்தாந்தங்களைத் தோற்கடிக்க, *இன்று எமக்குள்ள சக்தி "வாக்குரிமைதான்".*

எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் உணர்ச்சிகளுக்கு இரையாகாது, பொறுமையாக செயற்படுமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது.

ஒரு தேர்தலில் தோற்றதற்காக ஒரு தசாப்தகால அபிவிருத்திகளை மறந்து செயற்படுவது மனிதாபிமானமாகாது. "சுவரில்தான் சித்திரம் வரையாலாமே தவிர,சிந்தனைகளில் வரைய முடியாது." அவ்வாறு வரைந்தாலும் பிறரால் அதைப் பார்க்க முடியாது.

எனவே, எமக்கான சுவராக, முகவரியாக நாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரைப் பலப்படுத்த வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்