மே 09 வன்முறை – இதுவரை 883 பேர் கைது


கடந்த மே 09 திகதி ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக் களங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.


இச்சம்பவங்கள் தொடர்பில், மொரட்டுவை மேயர் சமன் லால் பெனாண்டோ, சீதாவகபுர பிரதேச சபைத் தலைவர் ஜயந்த ரோஹண, சீதாவக்க பிரதேச சபை உறுப்பினர் பந்துல ஜயமான்ன, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன, கரந்தெனிய பிரதேச சபை உறுப்பினர் சமீர சத்துரங்க, டான் பிரியசாத் ஆகியோர் இன்று (18) CID யினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவங்கள் தொடர்பில் நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களில் 805 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், நேற்றையதினம் (17) 219 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் 68 பேருக்கு நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்களில் 57 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


குறித்த சம்பவங்கள் தொடரபில் இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 364 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


கைதான 412 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் இன்று (18) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இது தொடர்பான விசாரணைகளை நாடு முழுவதும் பொலிசார் மற்றும் CID யினர் மேற்கொண்டுள்ளனர்.