சிறுவர் பூங்காக்கள் போதைப்பாவனையாளர்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது- கல்முனை மாநகர சபை உறுப்பினர் சமட் ஹமீட்.

 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை மாநகர சிறுவர் பூங்காக்களின் ஒழுங்கான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பல்வேறுபட்ட கூடாத பழக்கங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை இரவு நேரங்களில் கல்முனை மாநகர சிறுவர் பூங்காக்களில் இடம்பெற்றுவருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய காலசூழ்நிலையில் இளைஞர்கள் முறை தவறி செல்கின்ற ஒரு நிலை இருக்கின்றது. எனவே உள்ளூராட்சி மன்றம் கலைவதற்கு ஒரு சில மாதங்கள் இருப்பதனால் காலதாமதங்களை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தாமல் கல்முனை மாநகரத்தில் காணப்படுகின்ற அனைத்து பிரதேச சிறுவர் பூங்காக்களுக்கும் உயிரோட்டத்தை வழங்குமாறு கல்முனை முதல்வரை எனது மக்கள் சார்பாக பல தடவைகள் வேண்டியுள்ளேன் என தேசிய காங்கிரஸ் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர் சமட் ஹமீட் தெரிவித்தார். 


இன்று இடம்பெற்ற அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்காவின் மருதமுனை கிளையின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எனது வட்டாரமானது ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 13 வேட்பாளர்களுக்கு மேல் காணப்பட்ட ஒரு வட்டாரமாகும் . அந்த வட்டாரத்தில் ஒரு சில வேட்பாளர்கள் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்காது மக்களின் வாக்குகளுக்கும் மதிப்பளிக்காமல் அவர்களின் ஜனநாயக உரிமைகளை பேணிப் பாதுகாக்காமலும் தேர்தலில் ஈடுபட்டதை நான் கண்கூடாக பார்க்கக்கூடிய நிலைமையாக இருந்தது . அந்தக் காலக்கட்டத்திலும் கூட என்னுடைய தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களின் நேர்மையான அரசியலைப் பின்பற்றி எனது அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தேன் . அந்த வகையில் அந்த வட்டாரத்தில் காணப்பட்ட பல்வேறுபட்ட இலஞ்சப் பொருட்கள் , ஒப்பந்தங்கள், பசப்பு வார்த்தைகள் என பல்வேறுபட்ட மக்களின் வாக்குரிமையை சூரையாடிய நிலைமையில் அவர்களுக்கு மத்தியில் என்னையும் ஒரு வேட்பாளராக நினைத்து என்னுடைய பேச்சுக்களுக்கு செவிமடுத்து மக்கள் எனக்கு வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளை என்னால் முடிந்தவரை தீர்த்து கொடுக்க தயாராக இருக்கிறேன். 


கல்முனை மாநகர எல்லையில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் அமையப்பெற்றிருக்கும் சிறுவர் பூங்காக்கள் ஒழுங்காக பராமரிக்கப்படாத நிலையில் அத்தனையும் உப்புக்காற்றுக்கு இரையாகி துருப்பிடித்திருக்கிறது. பூங்காவில் உள்ள சிறுவர்களின் ஊஞ்சல்கள் விளையாட முடியாது அறுந்து விழும் நிலையில் உள்ளது. பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்து நிர்மாணிக்கப்பட்ட கல்முனை சிறுவர் பூங்கா வாயிற்கதவு உடைந்து விழுந்துள்ளது கவலையளிக்கிறது. 


குறுகிய காலப்பயன்பாட்டுக்கும்  உட்படாத நிலையில் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கழிவு இரும்புக்கும் எடுக்க முடியாத நிலையில் இருக்க காரணம் பொருத்தமற்ற  பாராமரிப்பற்றிருப்பதுமாகும். இறப்பர் மெத்தைகளோடு அமையப்பெறவேண்டிய சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் இது வரைகாலமும் இறப்பர் மெத்தைகளே இல்லாமலேயே பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதோடு ஆபத்தான சூழலிலேயே சிறுவர்கள் விளையாடி வந்திருக்கின்றனர். ஆனால் தெய்வாதீனமாக எந்த அசம்பாவிதங்களும் மேற்படி இடங்களில் இன்றுவரை பெரியளவில் பதிவாகியிருக்கவில்லை. இருந்தாலும் பாரிய அனர்த்தம் வர முன்னர் இந்த பூங்காக்களை பாவனைக்கு உகந்ததாக மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது.


மழைக்காலம் ஆரம்பித்துள்ளதனால் குறித்த பூங்காக்களில் நீர்வடிந்தோட முடியாமல் குளம்போன்று தேங்கி நிற்கிறது. இந்த பூங்காக்களை பராமரிப்பதில் கல்முனை மாநகரசபையோ, சபையின் உரிய அதிகாரிகளோ இன்றுவரை எந்தவித எத்தனங்களும் எடுக்காதது கவலையளிக்கிறது. பெயர்ப்பலகை கூட இல்லாமல் சில இடங்களில் புற்கள் வளர்ந்தும் கட்டாக்காலி மாடுகளின் இருப்பிடமாகவும் உள்ள இந்த நிலையை கவனத்தில் எடுத்து சிறுவர்களின் பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து மாநகர மேயர் மீது அமானிதமான சிறுவர் பூங்காக்களை பொருத்தமான பாதுகாப்பு வசதிகளை செய்து பாராமரித்துத்தர முன்வர வேண்டும் என்று பிரதேச பொதுமக்கள் சார்பில் கல்முனை மாநகர சபை நிர்வாகத்தை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.