எச்சரிக்கை! 6 மாதத்தில் 12 பேர் உயிரிழப்பு!


கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் (விசர்நாய்க்கடி நோயினால்) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 


பொது சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் கலாநிதி எல்.டி. கித்சிரி இது தொடர்பாக மேலும் கூறுகையில், ´95 வீதமான நோய்த்தொற்றுகள் நாய் கடிப்பதனால் ஏற்பட்டுவதாகவும், நாய்க்குட்டிகள் மூலம் குறித்த நோய் பரவி அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 


கடந்த ஆறு மாதங்களில் 5 இலட்ச நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 30 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். 


அத்துடன் நாட்டில் 20 முதல் 30 மில்லியன் நாய்கள் உள்ளதாகவும், இருப்பினும் ஆண்டுக்கு சுமார் 1.1 மில்லியன் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதாகவும் அவர் கூறினார். 


70 வீதமான நாய்க்குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்படுவதன் மூலம் குறித்த நோய் பரவுவதை குறைக்க முடியும் நீர்வெறுப்பு நோயினால் வருடாந்தம் 20 தொடக்கம் 30 வரையான மரணங்கள் ஏற்படுவதாகவும், வருடம் தோறும் ஆறு வாரங்களுக்கு மேல் உள்ள அனைத்து நாய்களுக்கும் விசர்நாய் கடி தடுப்பூசி போடுமாறு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாகவும் கித்சிறி கூறியுள்ளார். 


´விசர்நாய் கடிக்கு எதிராக நாய்களுக்கு தடுப்பூசி போடாததும் மற்றும் நாய் கடித்த பின்னர் உரிய நேரத்தில் சிகிச்சை பெறாததும் இலங்கையில் இறப்புக்கான முக்கிய காரணங்களாகும். 


விலங்கு கடித்த உடன் சிகிச்சை அளிக்கப்பட்டால் 100% குறித்த நோயில் இருந்து முழுமையாக குணமடைய முடியும். விசர் நாய் கடிக்கான (நீர்வெறுப்பு நோய்) தடுப்பூசிகள் அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாக பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 


1975 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் விசர் நாய்க்கடி தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், 1973 ஆம் ஆண்டு நீர்வெறுப்பு நோய் மூலம் 377 இறப்புகள் ஏற்பட்டதாகவும், 2014 ஆம் ஆண்டு அது 19 ஆக குறைந்ததாகவும் அவர் கூறினார். 


2025 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை நீர்வெறுப்பு நோய் அற்ற நாடாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக பயனுள்ள பல உத்திகள் மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுதாகவும் குறிப்பாக செல்லப்பிராணிகளை சொந்தமாக வைத்திருக்காதவர்களிடம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் பொது சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் கலாநிதி எல்.டி. கித்சிரி மேலும் தெரிவித்தார்.