கொரோனா தொடர்பான சுகாதார வழிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப் பட்டது.

 


மேல் மாகாணம் மற்றும் பிற மாகாணங்களில் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறியளவு அதிகரிப்பு உள்ளதாக கொவிட்-19 தொடர்பான சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.


இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மக்கள் முன்னர் கடைபிடித்த சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீளவும் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அதன்படி, முகக்கவசம் அணிதல், ஒரு மீற்றர் இடைவெளியை கடைபிடித்தல், தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் கூட்டம் கூடுவதைக் குறைத்தல் போன்ற சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


தற்போது, பரவுவது கொவிட்-19 வைரஸின் ஒமிக்ரொன் திரிபுடன் தொடர்புடைய உப பிறழ்வு என்றும் அது வேகமாகப் பரவி வருவதாகவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், இலங்கையின் தற்போதைய நிலைமை கட்டுப்படுத்தக்கூடிய மட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.


இதேவேளை, கொவிட் மரண எண்ணிக்கையிலும் சிறிது அதிகரிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.


எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய நிலைமையை, மற்றுமொரு கொவிட் அலையாக மாறாமல் கட்டுப்படுத்துவதற்கான முழு பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்