பண்டாரநாயக்க சிலை தொடர்பில் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு


பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் எல்லைக்குள் யாரும் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.


கோட்டை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீற்றர் தூரத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழையக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.


ஆனால் போராட்டக்குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து இந்த உத்தரவை நீக்குமாறு கோரியிருந்தனர்.


அந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் இன்று அழைக்கப்பட்ட போதே, ஆட்சேபனைகளை நீதிமன்றத்தில் எழுத்து மூலம் முன்வைக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு நீதவான் உத்தரவிட்டார்.


இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி குறித்த ஆட்சேபனைகளை முன்வைக்குமாறும், அன்றைய தினம் வழக்கை மீண்டும் அழைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.