சரத் வீரசேகரவிற்கு ஏற்பட்ட நிலை, விமல் வீரவன்ச தரப்புக்கு கப்பலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு..!





இலங்கையை வந்தடைந்துள்ள சீனாவின் யுவான் வாங் – 5 கப்பலின் கப்டன் இலங்கை பிரதிநிதிகளை அவமதித்ததாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாட்களில் சர்ச்சைக்குரிய விடயமாக பரவலாக பேசப்பட்ட இந்த கப்பல் இன்று -16- இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலை வரவேற்பதற்கென்று முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர்.

இதன்போது, அவரும் அவருடன் சென்ற குழுவினரும் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சரத் வீரசேகர, சீன கப்பலின் கப்டனுக்கு கைலாகு கொடுக்க முயன்றுள்ளார், எனினும் சீன கப்பலின் கப்டன் அதனை மறுத்து கையை உயர்த்தி காட்டும் வகையிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

அத்துடன், கப்பலை வரவேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் கப்பலுக்குள் செல்வதற்கு அனுமதி கோரியுள்ளனர்.

எனினும், அவர்கள் உட்செல்ல முடியாதென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையை வந்தடைந்த இந்தக்கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.