சீன கண்காணிப்பு கப்பலின் வருகைக்கு அனுமதி வழங்கியது இலங்கை..!







சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இன்று (12) அனுமதி வழங்கியது.






அதன் வருகையை ஏன் எதிர்த்தது என்பதற்கான “உறுதியான காரணங்களை” இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் தெரிவிக்கத் தவறியதை தொடர்ந்து இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




‘யுவான் வாங் 5’ இப்போது திட்டமிட்டதை விட ஐந்து நாட்கள் தாமதமாக ஓகஸ்ட் 16ஆம் திகதியன்று அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படும்.




இது முதலில் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரவிருந்தது. தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான கவலைகளை எழுப்பியதை அடுத்து இது தாமதமானது.




இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை, பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் கப்பல் திடீரென தடம் மாறியது. எனினும், தற்போது மீண்டும் ஹம்பாந்தோட்டை நோக்கிச் பயணிக்கிறது.




இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இது குறித்து கவலை வெளியிட்டார். எவ்வாறாயினும், கப்பலின் வருகையை எதிர்ப்பதற்கான உறுதியான காரணங்களை வழங்குமாறு அவரிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.




இதே செய்தியை இந்திய தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.




இரு தரப்பினரும் உறுதியான காரணங்களை முன்வைக்காததால், இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியது. கப்பலை நிறுத்துவது இலங்கை அரசுக்கு புவிசார் அரசியல் தலைவலியாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.