பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன

 




பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


கொள்கை ரீதியில் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


எனினும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விசேட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான காலத்தை ஒத்திவைத்து, எதிர்காலத்தில் அமுலாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.


தற்போது 14 நாட்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் விசேட கொடுப்பனவை எதிர்வரும் காலத்தில் 21 நாட்களாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.


பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் உணவிற்கான கொடுப்பனவிற்கு இணையாக இந்த விசேட கொடுப்பனவையும் அதிகரிக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி கூறினார்.