ரூ. 650 கோடி கடனை செலுத்தியது லிட்ரோ


எரிவாயு விநியோகத்தை பராமரிக்கப்பதற்காக உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் டொலர் (ரூ. 2600 கோடி) கடனில் 650 கோடி ரூபாய் திறைசேரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், இன்று (28) தெரிவித்தார்.


கடன் தொகையின் மற்றுமொரு பகுதியான, 8 பில்லியன் ரூபாய் (800 கோடி) ஒக்டோபரில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் முழுக் கடன் தொகையும் டிசெம்பர் மாதம் திறைசேரிக்கு செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.


கடந்த ஜூலை மாதம் கடனின் முதல் பகுதியை பெற்ற லிட்ரோ, கடனின் நடுப்பகுதியில் இருந்து எரிவாயுவுக்கான கட்டணத்தை செலுத்தி வருவதாகவும் கடனின் இறுதிப் பகுதி பெறப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.


கடன் 10 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட கால கடனாக இருந்தாலும், திறைசேரிக்கு கடனை செலுத்தி வருவதாகவும் நாடு எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் லிட்ரோ செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.