முச்சக்கர வண்டி சாரதிகள் பொலிஸ் தலைமையகத்துக்கு…


முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்தும் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.


இன்று (14) காலை தொழில்முறை முச்சக்கர வண்டி சாரதிகள்- பொலிஸ் மா அதிபருக்கு இடையிலான சந்திப்பிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அசோக் அபேசிங்க இவ்வாறு தெரிவித்தார்.


முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


எனினும் பொலிஸாரின் தலையீட்டினால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.


எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க மற்றும் முச்சக்கரவண்டி சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.