வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை!





வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்தார்.


பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் வெதுப்பக உணவு பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


நூற்றுக்கு 08 வீதமாக அறவிடப்பட்ட பெறுமதி சேர் வரியானது 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கு இரண்டரை வீதம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அறவிடப்படுவதாலும் இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் கோதுமை மா ஒரு மூடையின் விலையானது 21 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கோதுமைக்கு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் சந்தையில் கோதுமைக்கு பற்றாக்குறையே நிலவுகின்றது.


வரி அறவீடுகள் அதிகரிப்பு மற்றும் கோதுமை விலை அதிகரிப்பு ஆகியனவற்றை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது பாண் ஒரு இறாத்தலை 500 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் எனவும் அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினை தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்தார்.