சவூதி அரேபிய வர்த்தக உயர்மட்ட குழு இலங்கை வருவதற்கு ஏற்பாடு

 

சவூதி அரேபியாவின் வர்த்தக உயர் மட்ட பிரதிநிதிகள் குழு விரைவில் கொழும்பு வரவுள்ளது. வர்த்தகம், முதலீடு, விவசாயம் , மீன் வளர்ப்பு, சுரங்கத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறைகளில் ஒத்துழைப்புக்களை விரிவாக்கும் நோக்கில் இக்குழு இங்கு வரவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சவூதி அரேபியா சென்ற அமைச்சர் அங்கு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டார். ரியாத் வர்த்தக சம்மேளனம், முஸ்லிம் உலக  சம்மேளனம், மன்னர் சல்மான் அமைப்பு மற்றும் சவூதி வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்தார்.முடிக்குரிய இளவரசர் சல்மான்பின் அப்துல் அஸீஸ் 2030 இல்,முன்னெடுக்கவுள்ள சுற்றுலா, வர்த்தகத்துறை மேம்பாடுகளில் இலங்கையையும் உள்வாங்குவதற்கான விருப்புக்களை அமைச்சர் நஸீர் அஹமட் இதன்போது வெளியிட்டிருந்தார்.


இதனடிப்படையில் இதற்கான முன்னோடிக் கள விஜயமாகவே சவூதிஅரேபிய வர்த்தக உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கை வரவுள்ளது.