ஏனைய எரிபொருள் விலைகள் குறையுமா? எரிசக்தி அமைச்சர் விளக்கம்

 


உலக சந்தையில் குறைவடைந்த மசகு எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் பெற்றோல் விலை மாத்திரம் குறைப்பட்ட போதிலும் டீசல் விலை குறைக்கப்படாமைக்கு காரணம் என்னவென்று பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் சபையின் அவர் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மசகு எண்ணெய் சுத்தகரிப்பின் மூலம் நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 30 சதவீதம் மாத்திரமே ஈடுசெய்யப்படுகிறது 70 சதவீதம் நேரடி முடிவுப்பொருளாக எரிபொருள் இறக்குமதிசெய்யப்படுகிறது. அந்த 30 சதவீதத்தினுள், டீசல், பெற்றோல், விமானத்துக்கான எரிபொருள், மண்ணெண்ணெய், நெப்தா மற்றும் உலை எண்ணெய் உள்ளிட்ட 6 பொருட்கள் உள்ளடங்கும். எனவே, குறைவடையும் மசகு எண்ணெய் விலைக்கு ஏற்ப அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் குறைக்க முடியாது.


முன்னதாக பல அரசாங்கங்கள் சலுகை விலையில் டீசல் வழங்கிவந்தது. தற்போது, சலுகை நீக்கப்பட்டு இறக்குமதி விலைகேற்க வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் டீசல் இறக்குமதியில் லீற்றர் ஒன்றுக்கு 30சதவீதம் நட்டம் நிலவிவந்தது. தற்போது நட்டத்துக்கு மாறாக ஒரு ரூபா அளவில் இலாபம் ஏற்பட்டுள்ளது. எனினும், 5 -10 ரூபா வரை விலை குறைக்க முடியாது. அவ்வாறு செய்தால் அடுத்த எரிபொருள் அளவை எம்மால் கொள்வனவு செய்யமுடியாது.


தற்போது, மண்ணெண்ணெய்யோ அல்லது வேறு பெற்றோலிய உற்பத்திகளின் விலையையோ குறைப்பு செய்தால் நஷ்டம் ஏற்படும். எனினும், பெற்றோல் இறக்குமதியில் அண்மைய காலங்களில் லீற்றருக்கு 70 ரூபா அளவில் இலாபம் ஏற்பட்டது. எனவேதான் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது. உலக சந்தையின் விலைகுறைப்பின் பலனை 30 நாட்களின் பின்னரே நாம் அனுபவிக்க முடியும்.


எனவே, குறைவடையும் மசகு எண்ணெய் விலைக்கேற்ப எதிர்வரும் காலங்களில் எரிபொருட்களின் விலைகளை மேலும் குறைக்க முடியுமென எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.