உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் : அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவு : தீர்ப்பு திகதி இன்றி ஒத்தி வைப்பு



(எம்.எப்.எம்.பஸீர்)


போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளும் நேற்று (5) நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.


இந்நிலையில் குறித்த மனுக்களின் தீர்ப்புக்காக, வழக்குகளானது திகதி அறிவிப்பு இன்றி ஒத்தி வைக்கப்பட்டது.


குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் நேற்று இறுதியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.


இதன்போதே உயர் நீதிமன்றம் வழக்கை நிறைவுறுத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், அனைத்து தரப்பினரும் தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை எதிர்வரும் 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்தது.


21/4 தற்கொலை குண்டுத் தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலிலோ சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.


இதில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி, பொலிஸ்மா அதிபர் பூஜித், தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ், மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டனர்.


இந்நிலையில் குறித்த 12 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக கடந்த 2019 ஒக்டோபர் 2 ஆம் திகதி உயர் நீதிமன்றம் அறிவித்தது. அது முதல் மனு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்தன.


மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி காமினி பெரேரா, சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே, சட்டத்தரணி வர்தனி கருணாரத்ன, சட்டத்தரணி லக்ஷான் டயஸ், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, சட்டத்தரணி தனுக நந்தசிறி, ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.


பிரதிவாதிகளில் சிலருக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான, மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, சிரேஷ்ட பிரத் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அவந்தி பெரேரா, சிரேஷ்ட அரச சட்டவாதி சுரேகா அஹமட், அரச சட்டவாதி இந்துனி புஞ்சிஹேவா ஆகியோரைக் கொண்ட குழுவொன்று ஆஜரானது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயாவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் ஆஜராகினர்.


ஏனைய பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன், ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி துலிந்த வீரசூரிய,சட்டத்தரணி சுதர்ஷன குனவர்தன, சட்டத்தரணி கே.வி.எஸ். குனசேகரராஜன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.


இந்நிலையில், பிரதிவாதிகளில் ஒருவராக பெயரிடப்பட்டிருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அவ்வழக்குகளை முன்னெடுத்து செல்ல முடியாது என உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி அறிவித்தது.


பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக அரசியலமைப்பின் 35 (1) உறுப்புரை பிரகாரம் வழக்கொன்றை முன்னெடுத்து செல்ல முடியாது என அறிவித்து உயர் நீதிமன்றம் அதனை அறிவித்திருந்தது.


அவ்வாறான பின்னணியிலேயே இந்த மனுக்கள் தொடர்பிலான விசாரணைகள் நேற்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.