தேர்தல் ஆணைக்குழுவிற்கு அவசர கடிதம் எழுதியுள்ள எதிர்க்கட்சிகள்




உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு கோரி அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் கூட்டாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவசர கடிதம் எழுதியுள்ளன.


இக்கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விடுத்துள்ளன.


இதன்படி, எதிர்க்கட்சியில் அங்க வகிக்கும் அனைத்து, கட்சிகளினதும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட சில நாடளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கையொப்பம் இட்டுள்ள கடிதமொன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கு இருந்த ஒரேயொரு தடையை உயர் நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளதால், எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


எனினும், இது சம்பந்தமாக திறைசேரி செயலாளருடனோ வேறு எவருடனுமோ நீங்கள் கலந்துரையாடத் தேவையில்லை” என அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னதாக, தேர்தலை நடத்தகூடிய திகதியை தாமதமின்றி நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.


அத்தோடு, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை, நாளை மறுதினம் (7) காலை 9 மணிக்கு தேர்தல்கள் செயலகத்தில் சந்திக்க விரும்புவதாகவும் எதிர்க்கட்சிகள் அந்தக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.