வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு தடையுத்தரவு : கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்




இன்றையதினம் (07) ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைய, வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.


அதற்கமைய, இன்று (07) முற்பகல் 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை குறித்த பகுதிக்குள் நுழைய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) இன்றையதினம் (07) கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் திலிண கமகேவினால் நீதிமன்றம் உத்தரவைவ பிறப்பித்துள்ளார்.


குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுமென தெரிவித்து அவ்வார்ப்பாட்டத்தை நடத்தாதிருக்கும் உத்தரவை கொழும்பு கோட்டை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான, குறித்த சில பகுதிகளுக்கு நுழைவதை தடுக்கும் உத்தரவை வழங்கியுள்ளார்.


7 முக்கியய கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் (07) பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் மாபெரும் கண்டனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.


மாணவர்களை கொழும்பு கோட்டை பகுதிக்கு வரவழைத்து, அதன் பின்னர் போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதற்கமைய, குறித்த பகுதியில் இன்றையதினம் (07) போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுமென தெரிவிக்கப்படுவதால், வாகனங்களில் பயணிப்போர் உரிய மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.