ஆளுநரின் கட்டுப்பாட்டில் வடக்கின் 34 உள்ளூராட்சி சபைகளும் : பொது மக்களுக்கு தடங்கலின்றி சேவைகளை வழங்க அரச அதிகாரிகளுக்குப் பணிப்பு



வட மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி சபைகளும் மாகாண ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த சபைகள் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சேவைகளையும் தடங்கலின்றி பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநரின் செயலகம் தெரிவித்துள்ளது.


மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி சபைகளினதும் ஆட்சிக் காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதி நிறைவுக்கு வந்ததையடுத்து அவற்றை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேற்கொண்டுள்ளார்.


அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படாத காலங்களிலும் தொடர்ச்சியாக மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் அதிகாரிகள் முன்னின்று செயற்பட வேண்டும் என்றும் மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.


அதற்கிணங்க மாநகர ஆணையாளர் மற்றும் அனைத்து சபைகளினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.


அது தொடர்பாக ஆளுநரின் செயலகத்தினால் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.


வட மாகாணத்தில் மாகாண சபை செயற்படாத இந்த காலப்பகுதியில் உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சரது நிறைவேற்றுக் கடமைகளையும் ஆற்றிவரும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா, உள்ளூராட்சி சபைகள் செயற்படாத காலங்களிலும் தடங்கலின்றி பொதுமக்களுக்கான சேவைகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


அதற்காக மாநகர ஆணையாளரும் அனைத்து சபைகளினதும் செயலாளர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


அதைவேளை, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களிடமிருந்து கூடுதலான கண்காணிப்பு நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் உடன் நடைமுறைக்குவரும் வகையில் சில முக்கியமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் சபைகளின் வருமானங்கள் தொடர்பில் சபைகளின் செயலாளர்களுக்கு இலக்குகள் வழங்கப்பட்டு அவர்களது வருடாந்த செயலாற்றுகை மதிப்பிடலில் அது உள்வாங்கப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், அலுவலகங்களின் ஆய்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் சபைகளின் செலவினங்கள் தொடர்பான கண்காணிப்புக்காகவும் அறிக்கையிடலுக்காகவும் தொடர்ச்சியான விஜயங்களை மேற்கொள்ளவுள்ளார்கள்.


அத்துடன் சகல உள்ளூராட்சி சபைகளினதும் தினசரி வருமானம், செலவினங்களை அவர்கள் இணையத்தின் மூலம் கணக்காய்வு செய்யவுமுள்ளார்கள் உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், அலுவலகங்களின் ஆய்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் சபைகளின் செலவினங்கள் தொடர்பான கண்காணிப்புக்காகவும் அறிக்கையிடலுக்காகவும் தொடர்ச்சியான விஜயங்களை மேற்கொள்ளவுள்ளார்கள்.