"மக்கள் காங்கிரஸின் தம்பலகாமம் முக்கியஸ்தர் ஆபிலூன் என்சுலூன் அவர்களின் மறைவு வேதனை தருகிறது..!"

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தரும் தம்பலகாமம் பிரதேச சபை, கல்மெட்டியாவ வடக்கு வட்டாரத் தலைவரும் வேட்பாளருமான ஆபிலூன் என்சுலூன் அவர்களின் மறைவு தனக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


அவர் தனது அனுதாபச் செய்தியில்,


"எமது கட்சியின் நீண்டகால உறுப்பினரும் கட்சியின் வளர்ச்சிக்காக மிகத் தீவிரமாக செயற்பட்டவருமான சகோதரர் ஆபிலூன் என்சுலூன் அவர்களின் இழப்பால் துயருறும் அந்தப் பிரதேச மக்களுடன் இணைந்து நானும் வேதனையடைகிறேன். 


சமூகப் பற்றும் சமூகத்தின் மீதான அக்கறையும்கொண்டு உழைத்தவரான அவர் இன, மத பேதங்களுக்கு அப்பால் தனது பணிகளை மேற்கொண்டார். சிங்கள சகோதரர்களை  பெரும்பான்மையாகக்கொண்ட கல்மெட்டியாவ வட்டார மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட இவர், மக்கள் பணிக்காக தன்னை ஈடுபடுத்தியவராவார். அவரைப்போன்று, அவரது சகோதரரும் எமது கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகின்றார்.


கல்மெட்டியாவ கிராம அபிவருத்திச் சங்கத்தின் (RDS) தலைவராக இருந்து, ஊரின் வளர்ச்சிக்காகவும் வட்டாரத்தின் குறைகளை தீர்ப்பதற்காகவும் பல்வேறு வழிகளில் உழைத்தவர். 


மனிதநேயம்கொண்ட அன்னார், எப்போதும் இன்முகத்துடன் தமது காரியங்களை ஆற்றிவந்ததுடன், கட்சித் தலைமை மற்றும் முக்கியஸ்தர்களுடன் அடிக்கடி தொடர்புகளை மேற்கொண்டு, பிரதேசத்தின் முன்னேற்றத்துக்காக கலந்துரையாடும் வழக்கத்தைக்கொண்டிருந்தார்.


நற்பண்பாளரான ஆபிலூன் என்சுலூன் அவர்களின் திடீர் மரணம் மிகவும் வேதனையளிக்கின்றது. அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு இழப்பை தாங்கக்கூடிய மனதைரியத்தையும் பொறுமையையும் வழங்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். 


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரது நற்கருமங்களையும் சேவைகளையும் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்ந்த சுவன பாக்கியத்தை அவருக்கு நசீபாக்குவானாக ஆமீன்..!" என்று குறிப்பிட்டுள்ளார்.