🔴குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான அரிசி விநியோகம்

 *CEYLON NEWS 24 🇱🇰*


நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


2022/2023 பெரும் போகத்தில் அரசாங்க அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை மற்றும் வேலணை பிரதேசங்களை மையமாக வைத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. =


குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான அரிசி விநியோகம் சாகல ரத்நாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமையவே குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இத்திட்டம் ஏழை மக்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ள அதேநேரம் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு, விளைந்த அறுவடைக்கு உரிய விலை கிடைத்துள்ளது.


மேலும், இந்த திட்டம் சிறு நெல் ஆலை உரிமையாளர்களையும் வலுவூட்டுவதாக அமையும். இந்த அரிசி விநியோகத்தின் முதல் கட்டத்தை தமிழ்,சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அதன் இரண்டாம் கட்டம் இன்று யாழ்.மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுகின்றது. இராணுவம் தனது கடமைகளை செய்வதோடு, விவசாய வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டுள்ளமை இத் திட்டத்தின் சிறப்பம்சமாகும். இத் திட்டத்தில் விளைசலுக்காக செலவிடப்பட்ட பணத்தை மீளப்பெற்றுக்கொண்டு எஞ்சியவற்றை வறிய மக்களுக்கு விநியோகிக்க இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது.