“கள நிலவரங்களை கட்டியங்கூறும் ஆளுமையாளர் பொன்னையா மாணிக்கவாசகம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!


கள நிலவரங்களைக் கட்டியங்கூறும் பொறுப்புள்ள ஊடகவியலாளராக திரு.பொன்னையா மாணிக்கவாசகம் பணிபுரிந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 


சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின்  மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,


“தகவல்களைத் திரட்டுவதிலும் அவற்றை செய்தியாக வெளியிடுவதிலும் மாணிக்கவாசகத்திடம் அபார அனுபவம் இருந்தது. வேறுபாடுகள், கருத்துமோதல்கள் மற்றும் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஊடக ஆளுமைகளால் அவர் செய்திகளைக் கையாண்டவிதமே, அவரை இந்தளவு உச்சத்தில் உயர்த்தியுள்ளது. 


யுத்த காலத்தில் கூட தர்மம் தவறாமல் தெளிவான செய்திகளைத் தேடித்தந்தவர் அமரர் மாணிக்கவாசகம். வன்னிக்களத்தின் வலிகளை தமிழ் பேசும்  மக்களின் மனக்கண் முன் கொண்டுவந்து, சர்வதேசத்தின் கண்களைத் திறந்த பெருமையும் அவரது எழுத்துக்களுக்குண்டு. 


வவுனியா மண்ணின் கீர்த்திமிக்க சிரேஷ்ட ஊடகவியலாளராக இருந்து லண்டன் பிபிசி, வீரகேசரி உள்ளிட்ட பல ஊடகங்களில்   பணியாற்றிய அவர், சிறந்த எதிர்வுகூறல்கள், கட்டுரைகள் பலவற்றைத் தந்தவர். 


சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் வகையில் அவரது எழுத்துக்கள் இருந்தன. மற்றொரு சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களின் நியாயமான அரசியல் தனித்துவங்களை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு, அமரர் மாணிக்கவாசகத்தின் ஆளுமை முழுமை பெற்றிருந்தது.


அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.