🔴ஜனாதிபதியின் பணிப்புரைகளைக் கூட இந்த அரசாங்கம் கருத்திற் கொள்ளவில்லை


அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்களை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிந்த போதிலும், இந்த நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி கூட குறித்த நியமனத்தை மேற்கொள்ளுமாறு பணிப்புரை பிறப்பித்தும், ஜனாதிபதியின் பனிப்புரையைக் கூட தெரிவுக் குழு புறக்கணித்துள்ளதுடன் இதுவரை குறித்த நியமனம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


ஜனாதிபதியின் பனிப்புரையைக் கூட புறக்கணித்து தற்காலிக தலைவர்களை நியமித்து அரசாங்கம் ஆடும் இந்த ஆட்டத்தை புரிந்து கொள்ள முடியாதுள்ளதாகவும்,எனவே இந்நியமனம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவி தொடர்பான பிரச்சினை பல வாரங்களாக தீர்க்கப்படாதுள்ளதாகவும்,காலம் தாழ்த்தி காலம் தாழ்த்தி அநீதியான முறையில் சில செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், தற்காலிக தலைவர்கள் நியமிக்கப்படுவதாகவும், அரசாங்க நிதி தொடர்பான தலைவர் பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க ஆளும் தரப்பு விருப்பம் கொள்வதாக ஜனாதிபதி தெரித்ததாகவும்,

தெரிவுக் குழு கூடும் போது நிறைவேற்று அதிகாரம் கொண்டவரின் பனிப்புரை நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்தாலும்,அது அவ்வாறு நிறைவேற்றப்படவில்லை எனவும்,ஜனாதிபதியின் பனிப்புரையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என தான் கேட்க விரும்புவதாகவும், ஹர்ஷவை நியமிப்பதில் ஆளும் தரப்புக்குள்ள வருத்தம் யாது என கேட்க விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


எவரேனும் ஒருவர் நல்ல விடயங்களை முன்னெடுக்கும் போது, அவரது செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்காமையாலையே நாடு இவ்வாறு வங்குரோத்து நிலையை அடைவதற்கு காரணமாகும் எனவும், நீங்களும் செய்வதில்லை செய்பவரையும் விடுவதில்லை எனவும், கபீர் ஹாசிம் மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரை நியமிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் சுசில் பிரேமஜயந்தவிற்கும் பணிப்புரை விடுத்தாரல்லவா? என தெரிவித்த அவர், அவ்வாறெனில் ஏன் அதை உங்களால் மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் சபையில் கேள்வி எழுப்பினார்.