அமைச்சுப் பதவிகளை கோரி நிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு தனியான செயற்குழு ஒன்றை அமைத்து அவர்களுக்கு பொறுப்புக்களை ஒப்படைக்க அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த செயற்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு வாகன கொடுப்பனவு உள்ளிட்ட சில வரப்பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
⭕அமைச்சுப் பதவிகளுக்கு குறைந்த பதவி
எவ்வாறெனினும், அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு குறைந்த எந்தவொரு பதவியையும் ஏற்கப் போவதில்லை என மொட்டு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செயற்குழுவிற்கான அமர்வுகள் கடந்த வாரம் நடைபெற்ற போதிலும் எவரும் அதில் பங்குபற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாகன கொடுப்பனவுகளை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதிலும் அதனையும் அவர்கள் நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.
⭕ஜனாதிபதியின் நிலைப்பாடு
எவ்வாறெனினும், அமைச்சர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி கொண்டுள்ளார் என்றும் அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, நாடாளுமன்றில் தீர்மானம் மிக்க வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தை கவிழ்விக்கும் வகையில் வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.