அதிகார பகிர்வு விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்படுகின்றார் என்றும், இதன்படி பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகள் சர்வகட்சி கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஆளும் கட்சி பிரதம கொரடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் பின்னர், தனது கருத்தை முன்வைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”மாகாண சபைகளில் முதலமைச்சர்களாக பணியாற்றியவர்கள் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலேயே இருக்கின்றோம். அவர் எப்போதும் ஒற்றையாட்சி நாட்டுக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாகாண சபை முதலமைச்சர்களுக்கு அமைச்சரவைக்கு வந்து அமர்வதற்கான வாய்ப்பை அவர் வழங்கியிருந்தார்.
இதனால் மொட்டு கட்சியில் பிரிவு தொடர்பில் முயற்சித்தாலும் நாங்கள் அதிகார பகிர்வுக்காக கதைக்கின்றோம். 13 பிளஸ் தொடர்பிலேயே மஹிந்த பேசியிருந்தார். இதில் மறைக்க எதுவும் கிடையாது.
ஜனாதிபதி தலைமையில் நடக்கும் சர்வகட்சி கூட்டத்தில் எங்கள் நிலைப்பாடுகளை கூறுகின்றோம் என்பதுடன், மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியுடனேயே இதனை கூறுகின்றேன்” என்றார்.