மன்னாரில் இருந்து மாத்தளை வரை இடம்பெறும் மலையக மக்களின் பேரணிக்கு, கிழக்கிலும் வாழ்விட வாழ்வாதார உரிமை இழந்த முஸ்லிம் சமூகம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளதாக காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தெரிவித்தார்.
மலையக தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழ் மக்களின் இருநூறு வருடத்தை அனுஷ்டிக்கும்முகமாக இப்பேரணி இடம்பெற்று வருவதுடன், கடந்த 28ஆம் திகதழி தலைமன்னாரில் ஆரம்பித்த இப்பேரணி எதிர்வரும் சனிக்கிழமை மாத்தளை நகரில் முடிவடைகிறது.
மலையக மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கும் வண்ணம், கிழக்கு மாகாணத்திலும் தமது வாழ்விட காணி உரிமைகளை இழந்த முஸ்லிம் சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மிஹிந்தலை வரை சென்று பேரணியில் பங்குபற்றியிருப்பதாக நிஹால் அஹமட் மேலும் தெரிவித்தார்.
“மலையக எழுச்சிப் பயணம்” என்பது சக சகோதர பிரசைகளுடனான ஓர் உரையாடலாகும் என்றும் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சக சகோதர பிரசைகள் மத்தியில் மலையகத் தமிழ் சமுதாயத்தின் வரலாறு, போராட்டங்கள், சாதனைகள், பங்களிப்பு, தற்போதைய சமூக பொருளாதார- அரசியல் அந்தஸ்து மற்றும் அபிலாஷைகள் ஆகியவை பற்றிய அடிப்படை மட்டத்திலான புரிதலை ஏற்படுத்துவதே இந்தப் பயணத்தின் இலக்காகும் என மலையக எழுச்சிப் பயண ஏற்பாட்டுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்