குடிபோதையில் வாகனம் செலுத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹானின் வாகனத்தை மோதிய உதவி பொலிஸ் அத்தியட்சர்!

Ceylon Muslim
1 minute read
0


( அம்னா இர்ஷாத்)

புத்தளம் கொழும்பு பிரதான வீதியில், குடிபோதையில் தனது உத்தியோகபூர்வ வாகனத்தை செலுத்தி  விபத்தொன்றினை ஏற்படுத்தியமைக்காக உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  புத்தளம் பாலாவி சந்தியில் கடந்த 14 ஆம் திகதி  இரவு 10.00 மணியளவில் நடந்த விபத்து தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸ் வலயத்தின் 2 ஆம்  பிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் கைது செய்யப்ப‌டும் போது புத்தளம் வலய போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சராகவும் செயற்பட்டு வந்துள்ளதாக  பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. 

 கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் வாகனமும் உதவி பொலிஸ் அத்தியட்சரின் வாகனமுமே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தை அடுத்து நிதி இராஜாங்க அமைச்சர் சேமசிங்க வேறு ஒரு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதும் வாகன‌ங்களுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.  இதன்போது குடிபோதையில் இருந்தமையால் உதவி பொலிஸ் அத்தியட்சர், புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் உத்தரவின் பேரில் புத்தள‌ம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் தொடர்கின்ற‌ன.

To Top