மூதூர் சபை தமிழ் தரப்புக்கு: முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

Ceylon M
1 minute read
0

திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்காக நடாத்தப்பட்ட பகிரங்க வாக்களிப்பில், தவிசாளர் வேட்பாளராக போட்டியிட்ட, இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் செல்வரத்தினம் பிரகலாதன் வெற்றி பெற்றுள்ளார்.


தவிசாளர் தெரிவின் போது, இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் செல்வரத்தினம் பிரகலாதன் மற்றும் தேசிய மக்கள் கட்சி உறுப்பினர் ஆர்.எம்.ரிபான் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதன் காரணமாக, தவிசாளரை வாக்களிப்பின் மூலம், தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக, பகிரங்க வாக்கடுப்பை சில கட்சிகளும், இரகசிய வாக்கெடுப்பை தேசிய மக்கள் சக்தியும் கோரின. இந்த நிலையில், தவிசாளரை இரகசியவாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? என்பதை அறிந்து கொள்வதற்காக, உள்ளூராட்சி ஆணையாளரினால், இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில், மொத்தம் 22 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இதில், 9 வாக்குகள் தவிசாளர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும், தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.


இதன்போது, சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவர், தவிசாளர் தெருவுக்கு பகிரங்க வாக்கெடுப்பை கோரி, சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.


இந்த நிலையில், பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த வாக்களிப்பில் பதிவு செய்யப்பட்ட 21 வாக்குகளில் 13 வாக்குகளைப் பெற்று, செல்வரத்தினம் பிரகலாதன் வெற்றி பெற்றார்.

இவருக்கு ஆதரவாக, இலங்கை தமிழரசி கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

பகிரங்க வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி தவிசாளர் வேட்பாளர் ஆர்.எம்.ரிபான் 9 வாக்குகளை பெற்றுக் கொண்டார். இவருக்கு ஆதரவாக, தேசிய மக்கள் சக்தி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சி உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

உதவி தவிசாளராக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பீ. ரீ முஹம்மது பைசர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.

அதிகமாக  முஸ்லிம்கள் செரிந்துவாழும் இந்த பிரதேசத்தில் முஸ்லிம் தரப்புக்கள் ஒன்றாக இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என அங்குள்ள நம்பிக்கையாளர் சபை துண்டுப்பிரசுரம் வெளியிட்டிருந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் திடீரென தமிழரசு காட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க இரகசிய ஒப்பந்தம் செய்து, சபையை தாரைவார்க்க முஸ்லிம் காங்கிரஸ் வழி செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.  
To Top