கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய அவசர சந்திப்பு!

Ceylon Muslim
1 minute read
கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை 3 மணியளவில் அவசர சந்திப்பை நடத்தவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை இன்றைய தினம் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் திகதி வாக்குறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், எதிர்வரும் 14ஆம் திகதிதான் சபை கூடும் என்ற அறிவித்தலை கடந்த 4ஆம் திகதி இரவு விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி வெளியிட்டிருந்தார். இதனை ஆட்சேபித்து மறுநாள் 5ஆம் திகதி அறிக்கையொன்றை சபாநாயகர் வெளியிட்டிருந்தார்.

அதில்,

ஜனாதிபதியின் செயல் வெறுக்கத்தக்கது எனவும், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக ஏற்கவே முடியாது எனவும், வாக்குறுதியின் பிரகாரம் நாடாளுமன்றத்தை 7ஆம் திகதி கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், நேற்று தன்னை சந்தித்த அமெரிக்கத் தூதுவரிடமும் இந்த விவகாரத்தை சபாநாயகர் எடுத்துரைத்துள்ளார். எனினும், இன்று நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எதனையும் ஜனாதிபதி எடுக்கவில்லை.

இந்த நிலையிலேயே, கட்சித் தலைவர்களை இன்று மாலை அவசரமாகச் சந்திக்கின்றார் சபாநாயகர். இதன்போது அடுத்தகட்ட நடவடிக்கைள் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆராயவுள்ளதாக தெரியவருகிறது.
To Top