கொரோனா வைரஸுக்கு இனி தினசரி முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை என்றும், அதற்காக அமைக்கப்பட்ட அவசர பணிக்குழுவை இம்மாத இறுதியுடன் கலைக்கவும் வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் 12 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நெருக்கடிகளை சமாளிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தலைமையிலான கொரோனா வைரஸ் அவசர பணிக்குழு அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இக்குழு, ஜனாதிபதி டிரம்புக்கு அறிக்கை அளிப்பது, மருத்துவ நிறுவனங்கள், மாநில கவர்னர்கள் ஆகியோரை ஒருங்கிணைப்பது, மருத்துவமனைகளுக்கு உதவுவது போன்ற பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், அவசரநிலையை மாற்றி பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதில் டிரம்பின் கவனம் குவிந்துள்ளது. பொருளாதார முடக்கத்தால் ஏற்படும் துன்பங்கள் முக்கிய அச்சுறுத்தல் என்றும், எனவே பாதுகாப்பான முறையில் மீண்டும் வணிகத்தை திறக்கவும் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
ஆனால் பாதுகாப்பான சூழ்நிலை எதுவும் தற்போது நிலவவில்லை என கூறும் விமர்சகர்கள், நவம்பர் மாதம் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலுக்குள் பேரழிவுக்குள்ளாகியிருக்கும் பொருளாதாரத்தை உயர்த்த டிரம்ப் அவசரம் காட்டுவதாக கூறுகின்றனர்.
முறையான கொரோனா நெருக்கடி குழு இல்லாவிட்டாலும், டிரம்பிடம் மருத்துவ குழுக்கள் தொடர்ந்து விளக்கமளிப்பார்கள் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெய்லீ மெக்கானி தெரிவித்துள்ளார்.