- கதீஸ்
வவுனியாவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவில் புழுக்கள் காணப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொதுச்சுகாதார பரிசோதர்கள் குறித்த உணவகத்தை இன்று காலை சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தினார்கள்.
குறித்த உணவகத்தினால் ஊரடங்கு காலப்பகுதியில் வீடு சென்று உணவு விநியோகிக்கும் செயற்பாடு (Home delivery) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த உணவகத்தில் நேற்றிரவு (03) Home delivery மூலம் பெறப்பட்ட உணவில் புழுக்கள் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் வவுனியா பொது சுகாதார பரிசோதர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சான்றுப் பொருளுடன் (புழு காணப்பட்ட உணவுடன்) குறித்த உணவகத்தில் பொதுசுகாதார பரிசோதர்கள் இன்று திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த உணவகத்தில் மனித பாவனைக்கு உதவாத மரக்கறிகள் (கோவா , கரட் , கொத்துரொட்டி , நூடில்ஸ் , வெங்காயம்) , குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை கைப்பற்றிய பொதுசுகாதார பரிசோதகர்கள் அதனை எடுத்துச் சென்றதுடன் குறித்த உணவகம் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்
அத்துடன் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் , மரக்கறிகள் மற்றும் புழு காணப்பட்ட உணவு ஆகியவற்றை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் சான்றுப் படுத்தியதுடன் உணவக உரிமையாளரையும் ஆஜர்படுத்தினர்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய நீதிவான் குறித்த பிரபல உணவக உரிமையாளரை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் பாவனைக்கு ஒவ்வாத சான்று பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜுலை மாதம் 7ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.