எம்.எஸ்.எம்.ஸாகிர்
இலங்கையைப்
பொறுத்தவரையில் முஸ்லிம்கள் பலவகையான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
உலகத்திலே சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு எங்கு பார்த்தாலும்
பிரச்சினையாக இருக்கின்றது. உலகத்திலே முஸ்லிம்களுக்கு எல்லா வளத்தையும்
இறைவன் கொடுத்தும் நிம்மதி இல்லாமல் எமது சமூகம் இன்று வாழ்ந்து
கொண்டிருக்கின்றது என வர்த்தக - கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் குறிப்பிட்டார்
பிரபல எழுத்தாளர் வெலிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபா எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு விழா, ஸ்ரீலங்கா
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி நாளேட்டின் பிரதம ஆசிரியருமான
என்.எம். அமீன் தலைமையில் கொழும்பு அல் - ஹிதாயா எம். ஸீ. பஹார்தீன்
கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (22)சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..
அங்கு அமைச்சர் மேலும் பேசுகையில்,
ஐ.நா.
வைப் போல இஸ்லாமிய நாடுகளுக்கும் அமைப்பும் இருக்கின்றது. நிறைய வளம்
இருக்கின்றது. இருந்தும் எங்களுடைய நாடுகளுக்குள்ளே நிம்மதி இல்லை.
அச்சத்தோடும் பயத்தோடும் வாழக்கூடிய சூழ்நிலைதான் காணப்படுகின்றது.
மைத்திரி
அரசை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக கடந்த அரசியலில் என்றும் இல்லாதளவுக்கு
முஸ்லிம்களாகிய நாம் ஒற்றுமையைக் கடைப்பிடித்து ஆட்சியை நிலை நாட்டினோம்.
ஆனால் அதன் பிறகும் கூட பரிதாபகரமான நிலைதான் காணப்படுகின்றது. இதற்காக
வேறொரு ஆட்சியை புதிதாகக் கொண்டு வரவேண்டும் என்று நான் சொல்வதாக நினைக்கக்
கூடாது.
தடம்
புரளுகின்ற அரசியலை ஒரு சரியான பாதையில் கொண்டு வருவதற்கு முஸ்லிம்
அரசியல் வாதிகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
அரசியல்வாதிகள் தொடக்கம் அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்பும் இதற்கு
அவசியமாகும்.
98 வீதமான
பௌத்த மக்கள் நல்லவர்களாக இருக்கின்றார்கள். இரண்டு வீதமான கடும்
போக்குவாதிகள் இருந்து கொண்டு ஆட்சியாளர்களை ஆட வைக்கின்ற அளவுக்கு
ஊடகங்களைப் பயன்படுத்துகின்றார்கள்.
2 வீதமான
கடும்போக்குவாதிகள்தான் விபத்து விடயத்திலே ஜனாதிபதியை ரஷ்யாவில் வைத்து
கையொப்பமிடுவதற்குத் தூண்டினார்கள். காரணம் இனவாத தனியார் ஊடகங்களே!
எமக்கு தனியான, பலமான
ஊடகம் ஒன்று கட்டாயம் தேவை. நாட்டில் எத்தனையோ தனவந்தர்கள்
இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து பலமான ஊடகம் ஒன்றை
உருவாக்குவதற்கு முன் வரவேண்டும்.
வழிகாட்டுவதற்கு ஒரு சிறந்த ஊடகமும் தேவை. கட்டமைப்பும் தேவை.
எழுத்தாளர்களுடைய
எழுத்துக்கள் மற்றவர்களை சிந்திக்க வைக்கக் கூடிய எழுத்துக்களாக அமைந்தால்
சமூகத்துக்கு சிறந்தாக இருக்கும். இஸ்லாமிய வரையறைக்குள் இருந்து கொண்டு
பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.
முஸ்லிம்
தனியார் சட்டத்திற்கு முஸ்லிம் பெயர் தாங்கிய சில பெண்மணிகள் எதிர்ப்பு
தெரிவித்திருப்பது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இன்று பெயரளவில்தான்
முஸ்லிம் என்று ஒரு சில பெண்மணிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்லாம் மோசமான மார்க்கம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவர்களுடைய
செயற்பாடு இருக்கின்றது.
பிரபல எழுத்தாளர் ஜரீனா முஸ்தபா பத்து நூல்களை எழுதி, கலைத்துறையில் 25வருடங்க ளைக்
கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை படைப்புக்களை
வெளியிடுவதென்பது லேசான காரியமல்ல. அவரது எழுத்துப் பணி மேலும் மேலும்
தொடர வேண்டும் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்றும் இறைவனைப்
பிரார்த்திக்கின்றேன். என்றும் தெரிவித்தார்.
வெலிவிட்ட அந்நூர் ஜும்ஆப் பள்ளியின் நிர்வாக சபைத் தலைவர் எஸ். நெய்னா முஹம்மத் நூலின் முதற்பிரதியை பெற்றுக் கொண்டார்.
விழாவின்
விசேட அம்சமாக மன்னார் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் கலைஞர் முன்னணி ஆகியவற்றின் சார்பில் அதன் செயலாளர் கலைவாதி
கலீலினால் ஜரீனா முஸ்தபாவுக்கு “நாவல் அரசி” எனும் பட்டம் சூட்டப்பட்டு விருதும் வழங்கப்பட்டது. அமைச்சர் றிஷாத், ஜரீனா முஸ்தபா ஆகியொர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில், என்.எம். அமீன்,முன்னாள் அமைச்சர் ஏ. எச்.எம். அஸ்வர், காவ்யாபிமானி கலைவாதி கலீல், அஷ் - ஷெய்க் மஸாஹிர் மௌலவி, அஷ் - ஷெய்க் ஜெம்ஸீத் அஸீஸ், தமிழ்த் தென்றல் அலி - அக்பர், அஷ்ரப் சிஹாப்தீன், மற்றும் பலர் உரையாற்றினர். கவி மணி என். நஜ்முல் ஹுசைன் கவிமழை பொழிந்தார்.
ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், கலைஞர்கள், இலக்கி யவாதிகள், ஊர்ப்பிரமுகர்கள், நூ லாசிரியரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விழாவை புர்கான் பீ. இப்திகார் தொகுத்து வழங்கினார்.
