முஸ்லிம்
சமூகத்தின் சார்பில் பாராளுமன்றத்தில் உரக்கக் குரல் கொடுத்தமைக்காக
ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்திக்கு நாம்
பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
''
முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருவதனை அறிந்து அரசாங்கம் பேரீச்சம்
பழத்திற்கான வரியை அதிகரித்துள்ளது. இதன்மூலம் நோன்பு பிடிக்கும்
மக்களின் ஊடாக வருமானத்தை ஈட்டவே அரசாங்கம் முயற்சிக்கிறது. எனவே
இது தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யப்
போகின்றனர். முஸ்லிம் அமைச்சர்கள் பதில் வழங்குவார்களா?'' என மக்கள்
விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி
கேள்வி எழுப்பியிருந்தார்.
பாராளுமன்றத்தில்
கடந்த புதன்கிழமை விசேட வியாபார பண்டம் அறவீட்டு சட்டத்தின் மீதான
விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் எம்.பி.க்கள் எவருமே இது பற்றி வாய்திறக்காத நிலையில் ஜே.வி.பி. இதற்காக குரல் கொடுத்தமை பாராட்டத்தக்கதாகும்.
முஸ்லிம்
எம்.பி.க்கள் அரபு நாட்டுத் தூதரகங்களால் வழங்கப்படும் உயர்தர இலவச
பேரீச்சம் பழங்களால் நோன்பு துறப்பார்கள். அல்லது ரமழான் 30 நாட்களும்
இப்தார் நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். இதனால் பேரீச்சம் பழத்தின் விலை
பற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை.
ஆனால் அப்பாவி ஏழை முஸ்லிம்கள் அதிகபட்ச விலை கொடுத்து பேரீச்சம் பழம் வாங்கி நோன்பு திறக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
நோன்பு
காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு விநியோகிக்கும் பொருட்டு சவூதி அரேபியா
வருடாந்தம் தொன் கணக்கில் இலங்கைக்கு பேரீச்சம் பழத்தை அன்பளிப்பாக
வழங்குகிறது. ஆனால் அதற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
தான் வரி கட்ட வேண்டும்.
மொத்தத்தில் சவூதியின் இலவச பேரீச்சம் பழத்துக்கும் நாம் தான் வரி கட்ட வேண்டியுள்ளது. இதனால் அரசாங்கம் கொள்ளை இலாபமீட்டுகிறது.
இந்த அநீதியை தட்டிக் கேட்க முஸ்லிம் எம்.பி.க்களுக்கு அருகதையில்லாமல் போனது ஏன்? பதிலளிப்பார்களா?