ஏ.ஆர்.ஏ.பரீல்
முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும், வர்த்தக நிலையங்களையும் தாக்குவது தீவிரவாதச் செயலாகும். அரசாங்கம் இவ்வாறான தீவிரவாத செயற்பாடுகளுக்கு உடன் நடவடிக்கை எடுக்காததினாலேயே தாக்குதல்கள் தொடர்ந்தன.
நாட்டில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பு என்.எம்.பெரேரா ஞாபகார்த்த நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முஸ்லிம்களின் பள்ளிவாசல் தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் எரியூட்டல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் தற்போது இவ்வாறான சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவித்தார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தால் அது எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும், அபிவிருத்திக்கும் பெரும் பாதிப்பாக அமையும்.
சைட்டம் தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கம் நல்லதோர் தீர்வு காண வேண்டும். பணத்துக்காக மருத்துவப் பட்டம் வழங்கும் முறை இல்லாமற் செய்யப்பட வேண்டும்.
க.பொ.த(உ/த) பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்களே வைத்திய துறைக்குப் பொருத்தமானவர்கள். சித்தி பெறாத மாணவர்கள் பணத்தினால் வைத்தியர் பட்டத்தை பெற்றுக்கொள்ளும்முறை தவறானதாகும்.
இதேவேளை வைத்தியத்துறைக்கு தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் அரச பல்கலைக்கழகங்களில் இடமளிக்கும் வகையில் அதற்கான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்