முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்க நான் ஜெனீவா சென்றதாக பல குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினர் மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றன. உண்மையில், நான் முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்க ஜெனீவா செல்லவில்லை என்று, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று தெரிவித்தார்.
ஜெனீவா சென்று நேற்று (26.03.2018) காலை நாடு திரும்பிய அமைச்சர் ஊடகவியலாளர் மாநாடொன்றை, நேற்று மாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்தினார் இதன் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கை அரசாங்கத்தின் ஒரு பிரதிநிதியாகவே ஜெனீவா சென்று அங்கு மாநாட்டில் கலந்து கொண்டேன். இந்நாட்டில் அப்போதும்தான், இப்போதும்தான் இடம் பெறும் வன்செயல்களை மறைப்பதற்கு, ஒரு சிலர் என் மீது குற்றம் சுமத்துகின்றனர். அதை நான் வன்மையாக மறுக்கிறேன்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை சர்வதேசமயப்படுத்தவே நான் அங்கு சென்றேன். கடந்த 2014 ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினால்தான், நான் அந்த அரசிலிருந்து வெளியேறினேன். அதே போன்று, இந்த அரசிலும் கூட முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டால், இதிலிருந்தும் வெளியேற நான் சற்றும் தயங்க மாட்டேன்.
நான் அரசியல் செய்தாலும், முஸ்லிம் சமுதாயத்திறகாகவே செய்கிறேன்.
அவர்களின் நிழலிலேயே தொடர்ந்தும் பயணிப்பேன். அவர்களுக்கென்று ஒரு பிரச்சினை வரும் பொழுது, கை கெட்டி, வாய் பொத்தி ஒருபோதும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். அவர்களுக்காக நான் எப்பொழுதும் குரல் எழுப்பவும் தயங்க மாட்டேன். இதை நான் இஸ்லாமியன் என்ற வகையில், இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
