பேருவளை அளுத்கம கலவரத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? ஏன் அந்த இனக்கலவரத்தை உருவாக்கினார்கள் என்பது இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் அதுபற்றி பேசியவர்கள் எல்லோரும் இன்று அமைச்சர் பதவிகளில் இருக்கிறார்கள். இதுபற்றி மக்கள் இன்று அறிந்து கொண்டுள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். இரத்தினபுரி புதிய நகர் மத்திய வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, இன்று அரசாங்கம் நல்லிணக்கம் என்ற போர்வையில் இனங்களுக்கிடையில் பல்வேறு வேறுபாடுகளை உருவாக்கி அரசு குரோதங்களை ஏற்படுத்தி வருகிறது. நல்லிணக்கம் என்பது இனங்களுக்கிடையில் பேதங்களை உருவாக்குவதாக அமையக்கூடாது. அளுத்கம கலவரத்தை உருவாக்கியவர்கள் அந்தச் சம்பவத்தை அரசாங்கத்தைக் -கவிழ்ப்பதற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதேபோன்று கண்டி – திகன வன்முறைகளின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. நாமல் குமார வெளியிட்டுள்ள தகவல்கள் பல உண்மைகளை உறுதிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதி கொலை சதிமுயற்சி மற்றும் எனது குடும்பத்தினரை கொலை செய்ய சதி முயற்சி என்பன தொடர்பில் இந்தியர் ஒருவரும் வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவங்கள் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அரசியல் ப-ழிவாங்கல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. எங்களைப் பழிவாங்குவதற்கு எப்.சி.ஐ.டி. எனும் சட்டவிரோத நிறு-வனம் பயன்படுத்தப்படுகிறது.
பொய்யான வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு இன்று எப்.சி.ஐ.டி. உபயோகப்படுத்தப்படுகிறது. எப்.சி.ஐ.டி. இற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை நீதிமன்றம் இதுவரை விசாரிக்கவில்லை. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்ணாந்துக்கு எதிராக எப்.சி.ஐ.டி. இல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாட்சியாளர்கள் பல மாறுபட்ட வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்கள்.
இன்று அமைச்சர்கள் இலஞ்சம் வாங்குவதாக ஜனாதிபதி பகிரங்கமாக தெளிவாக குற்றம் சுமத்துகிறார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நாம் முக்கிய 10பேர் தொடர்பில் முறையிட்டோம். அது தொடர்பில் விசாரணை இடம்பெறவில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முதியோர் இருக்கும் வயோதிபர் இல்லம் என்று அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
இன்று இந்த அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்துள்ளது. நாங்கள் எமது ஆட்சிக்காலத்தில் பெற்ற கடன்களைக் கொண்டு நாட்டின் அபிவிருத்திகளை மேற்கொண்டோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை நாம் அமைத்தோம். சர்வதேசத்தின் கவனம் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்தின் பின்பு இலங்கையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இன்று அம்பாந்தோட்டை துறைமுகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.
