Headlines
Loading...
சஹ்ரானின் பிரச்சாரத்திற்கு சென்ற மருதமுனை நபர் விடுதலை..!

சஹ்ரானின் பிரச்சாரத்திற்கு சென்ற மருதமுனை நபர் விடுதலை..!

ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் பிரசாரத்தில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட மருதமுனையை சேர்ந்த ஏ.எச்.நில்ஷாத் என்ற இளைஞர் கல்முனை நீதிவான் நீதிமன்றினால் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 29ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவரது கைது விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட மனு, இன்று (03) கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பொலிஸ் சார்பில் ஆஜரான அப்துல் ஹை, குறித்த நபர் மீதான வழக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுப்பதற்கான ஏதுக்கள் இல்லை என அறிவித்ததைத் தொடர்ந்தும் இவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி, இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதற்கான நியாயங்களை முன்வைத்து வாதிட்டனர்.

இவற்றை செவிமடுத்த நீதி வான், சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன் இவ்வழக்கு முடிவுறும் வரை ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என சந்தேக நபரைப் பணித்ததுடன் வெளிநாட்டு பயணங்களுக்கும் நீதிவான் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் இவ்வழக்கு விசாரணை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதிக்கு நீதிவானால் ஒத்திவைக்கப்பட்டது.

சந்தேக நபரின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.எம்.முபீத் தலைமையில் சட்டத்தரணிகளான எம்.ஐ.இயாஸ்தீன், ஏ.ஜீ.பிரேம் நவாத், எம்.எப்.அனோஜ், எம்.ஐ.றைசுல் ஹாதி, ஐ.எல்.எம்.றமீஸ், என்.எம்.அசாம், றத்தீப் அஹமட் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.

0 Comments: