Headlines
Loading...
தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!


அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

இதற்கமைய, பெரிய மற்றும் சிறிய அளவிலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் உடனடியாக உயர் தரத்திலான துணிகளை உற்பத்தி செய்யவதற்கு ஆரம்பிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பை அண்மித்து அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களை இன்று பார்வையிட்டபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாடசாலை சீருடைக்கான கூப்பன் முறைமை அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக பெரிய அளவிலான மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட துணி உற்பத்தி நிறுவனங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பெருமளவானவர்கள் தொழிலை இழக்க நேரிட்டதாகவும் ஜனாதிபதியிடம் துணி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செலவில் 68 வீதத்தினை மீதப்படுத்த முடியுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூர் உற்பத்திகளை வாங்குவதன் மூலம் கல்வி அமைச்சினால் ஆண்டுக்கு 80 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாரும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.



அத்துடன், இவற்றைத் தயாரிப்பதற்கான பொருட்களை உள்நாட்டிலே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

0 Comments: