
கொரோனா தடுப்பூசிகளால் எவ்விதமான பிரயோசனமும் இல்லையென்பதை காண்பித்து மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலேயே, எதிர்க்கட்சியினர், வேண்டுமென கொரோனா வைரஸை தொற்றிக்கொள்கின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, மக்களிடத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்தவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இவ்வாறு படம் காண்பித்தாலும், எவ்விதமான அச்சமும் இன்றி, பொதுமக்கள், கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
குருநாகலில் நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
“தடுப்பூசி வழங்கப்பட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ளதை பார்க்கின்றோம். சில நாடுகள் மாதக்கணக்கில் முடக்கப்பட்டு மீண்டும் திறக்கையில் தொற்று பரவுவதைப் பார்த்துள்ளோம். எனவே கொரோனா தொற்றானது, இலங்கைக்கு மாத்திரம் வந்த சவால் இல்லை. உலகுடன் சேர்ந்தே இந்த விடயத்தில் நாமும் பயணிக்க வேண்டியுள்ளது” என்றார்.
“ஆரம்பத்தில் தடுப்பூசி ஏற்றவில்லை. கொண்டு வரவில்லை என்றனர். கொண்டு வரப்பட்டதன் பின்னர் அது அரசியல் மயமாக்கப்படடுள்ளது என்கின்றனர். தற்போது எதிர்க்கட்சி தலைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றுடனேயே அவர் பாராளுமன்றத்தும் வந்தார். அவரது பாரியாரின் சிகையலங்கா நிலையத்தில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளபோது அவர் தனிமைப்படுத்தலில் இருக்காமல் பாராளுமன்றத்துக்கும் வந்துவிட்டார்” என்றார்.
நாட்டு மக்கள் உயிரிழப்பதை பார்ப்பதே அவர்களின் ஒரே எதிர்பார்ப்பாகும். நாட்டிலுள்ள இரண்டரை கோடி மக்களும் இறந்துவிட வேண்டும். தங்களுடைய அணியிலுள்ள 4,5 பேர் மாத்திரமே மிச்சமிருந்தால் போதும் என நினைப்பவர்களே அவ்வணியில உள்ளனர்.
ஆனாலும், நாட்டு மக்களை எப்படியாவது வாழ வைக்கவே பார்க்கிறோம். ஆனால் மக்களுக்கு கொரோனா தொற்றவேண்டும். அவர்கள் உயிரிழக்கவேண்டும். பணத் தட்டுபாடு ஏற்பட வேணடும், என்றெல்லாம் நினைக்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றுமே நடைபெறவில்லை என்றார்.
0 கருத்துகள்