ரூ.5,000 கிடைப்பதை உறுதிப்படுத்தவும்’ - அரசாங்கத்திடம் இம்ரான் மஹ்ரூப் வேண்டுகோள்.




ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீட், அ.அச்சுதன்

கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு உண்மையில் மக்களின் கைகளுக்குக் கிடைக்குமா என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கொரோனா 3ஆவது அலையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குதல் என்ற தலைப்பில் பிரதமர் அலுவலகத்தால் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இந்தக் கொடுப்பனவு பெறத்தகுதியுள்ள மக்கள், ஏற்கெனவே சமுர்த்தி போன்ற ஏதாவது கொடுப்பனவு பெற்று வருவார்களாயின், அந்தக் கொடுப்பனவுக்கும் 5,000 ரூபாய்க்கும் இடைப்பட்ட தொகையே மக்களின் கைகளுக்கு வந்து சேரும் வகையிலேயே, இந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இதன்படி, கொரோனா பாதிப்புக்காக எனச் சொல்லப்படும் 5,000 ரூபாய் வழங்கப்படப் போவதில்லை என்பது தெளிவாகின்றது. 5,000 ரூபாய் வழங்குவதாக பிரசாரம் செய்து, மக்கள் ஏற்கனவே பெறும் உதவித் தொகையைக் கழித்து மிகுதித் தொகையையே வழங்குகின்றனர்.

“இந்த அரசாங்கம் மக்களை எப்படி ஏமாற்றுகின்றது என்பதற்கு இது சிறந்த உதாரணம். இப்படியான போலிப் பிரசாரங்களால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்