நிலைமை கட்டுப்பாட்டை மீறினால், நாடு மீண்டும் முடக்கப்படும்.


நாட்டில் நிலவும் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டை மீறினால், 

உரிய நேரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


பயணக் கட்டுப்பாடுகள் அல்லது நாட்டை முடக்கும் தீர்மானம் அதற்கேற்ப அரசாங்கத்தால் முடிவு செய்யப்படும் என்றார்.


சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.


சுகாதார அதிகாரிகள் நிலைமையை அவ்வப்போது ஆய்வு செய்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், தற்போது கொவிட் சூழ்நிலையை எதிர்கொள்ளும் நகர்வில் இருப்பதாகவும், அதே நேரத்தில் பொருளாதார மற்றும் சமூக அம்சங்களுடன் சமநிலையைப் பேணுவதாகவும் குறிப்பிட்டார்.


இருப்பினும், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் அல்லது நாடு முடக்கப்படவேண்டும் என்று அதிகாரிகள் உணர்ந்தால், தயக்கமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.


மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்