ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுகின்ற 'நகரத்திற்கு நகரம் கிராமத்திற்கு கிராமம் வீட்டிற்கு வீடு' நிகழ்ச்சியின் மற்றுமொரு கட்டமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) காலை லுணுகம்வெஹெர பெரலிஹெல விவசாயிகளைச் சந்தித்தார்.
இதன்போது அப்பகுதி மக்கள் எதிர்கட்சித் தலைவருடன் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்துக்களில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு.
• இரசாயன உரம் இறக்குமதிக்கான அனுமதியுடன் நாட்டில் ஆறு தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த உர மானியம் முறை இல்லாதொழிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந் நாட்டில் விவசாய சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ள பாரிய சேதம் என்று அவர் கூறினார்.
• முன்னதாக, ஒரு மெட்ரிக் டொன் யூரியா இறக்குமதி செய்ய 397 டொலர் செலவானது என்றாலும் இப்போது 1000 டொலர்களைச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதன்படி இன்று 50 கிலோ யூரியா மூட்டை ஒன்றை இறக்குமதி செய்ய 10,200 ரூபா ஒதுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அந்தத் தொகையை விவசாயிகளால் தாங்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
• உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதால் மட்டும் செயல்முறை நடைபெறாது என்றும் இதற்கான கடனுதவி கடிதங்களை வழங்குவதற்கு உரிய நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஆனால்,தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாட்டால் வங்கிகளின் கடன் கடிதம் வழங்கும் போக்கு குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் உர இறக்குமதி நடவடிக்கை தடைபடும் எனவும், இதன் மூலம் நாம் உரத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தாலும் உரிய நிறுவனங்கள் அதனை இறக்குமதி செய்யவில்லை என்ற தவறான எண்ணத்தை அரசாங்கம் ஏற்படுத்த முயற்சிக்கலாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
• நெல் கிலோ ஒன்றுக்கு 80 ரூபா உத்தரவாத விலையை அரசாங்கம் வழங்குவதாக சில ஆளும் தரப்பு அமைச்சர்கள் உறுதியளித்த போதிலும் அது சார்ந்து வரவு செலவு திட்டத்தில் இதற்கான ஒதுக்கீடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதன் மூலம் கூட அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றி விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
• தற்போதைய சூழ்நிலையில் நெல் விளைச்சல் மட்டும் குறையவில்லை என்றும் இதனால் விதை நெல் உற்பத்தி கூட குறைவதால் வரும் பருவத்திற்கு தேவையான போதிய விதை நெல் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இதனால் நாட்டில் தரம் குறைந்த விதைகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்