ஊடகங்களில் தனிப்பட்ட ரீதியில் நான் விசாரனைக்கு கலந்து கொள்ள வில்லை என குறிப்பிடப்பட்டதால் தான் இன்று ஆஜரானேன் - மஹேல ஜயவர்தன

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜரான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் விசாரணை பிரிவில் இன்று ஆஜராக வேண்டாம் என அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக குறித்த பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி, குறித்த பிரிவில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட குமார் சங்கக்கார நேற்று (02) 9 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று காலை 9 மணிக்கு விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு மஹேல ஜயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்து.
எனினும், விசாரணை குழுவில் இன்று ஆஜராக வேண்டாம் என மஹேலவிற்கு அறிவிக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
நேற்றிரவு (02) 11.30 மணியளவில் இன்றைய தினம் விசாரணை பிரிவில் ஆஜராக வேண்டாம் என தனக்கு அறிவிக்கப்பட்டதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனிப்பட்ட காரணம் காரணமாக விசாரணை பிரிவில் ஆஜராகவில்லை என தான் அறிவித்துள்ளதாக இன்று காலை நான் சில ஊடகங்களில் பார்த்தேன்.
இதன் காரணமாகதான் நான் இன்று காலை விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு அறிவித்து விட்டு இவ்விடத்திற்கு வந்தேன். நான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன். அவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவது எனது பொறுப்பாகும்.
மேலும் முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் தருவதாக மஹேல ஜயவர்தன விசேட விசாரணை பிரிவில் இருந்து புறப்படும் போது தெரிவித்திருந்தார்.
ஊடகங்களில் தனிப்பட்ட ரீதியில் நான் விசாரனைக்கு கலந்து கொள்ள வில்லை என குறிப்பிடப்பட்டதால் தான் இன்று ஆஜரானேன் - மஹேல ஜயவர்தன
Reviewed by ADMIN
on
July 03, 2020
Rating:
