நாடு எதிர்நோக்கும் பிரதான, அன்றாட பிரச்சினைகளுள் ஒன்றாக திண்மக் கழிவகற்றல் (குப்பை) விவகாரம் மாறியுள்ளது.
அதிலும் குறிப்பாக கொழும்பு நகரம் எதிர்நோக்கும் திண்மக் கழிவகற்றல் நெருக்கடி பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றும் அவ்வாறானதொரு ஆர்ப்பாட்டம் மீதொடமுல்ல மக்களால் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டது.
தற்சமயம் கொலன்னாவ பிரதேச சபைக்குட்பட்ட மீதொட்டமுல்ல பகுதியிலேயே கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன்காரணமாக அப் பகுதியே குப்பை மலையாகக் காட்சியளிக்கிறது. இதனால் அப் பகுதியைச் சூழ வாழும் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
மீதொட்டமுல்ல பகுதியில் சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பில் தினமும் 850 மெற்றிக் தொன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக அப் பகுதியைச் சூழவுள்ள 8 கிராம சேவகர் பகுதிகளில் வாழும் 8700 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆயிரம் மக்கள் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். இம் மக்கள் பாரிய நோய்களுக்கு முகங்கொடுத்து வருவதுடன் வீடுகளில் வசிக்க முடியாமலும் இப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் கல்வியைத் தொடர முடியாமலும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந் நிலையில் குறித்த பகுதி மக்கள் அண்மைக்காலமாக பாரிய போராட்டங்களை நடாத்தி வந்ததைத் தொடர்ந்து பொலிசார் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.
இதற்கமைய மீதொட்டமுல்லையில் உள்ள குப்பை மலைகளை கூடிய விரைவாக கொழும்பு மாநகர சபை அகற்ற வேண்டும் என கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும் இக் குப்பைகளை எங்கு கொண்டு சென்று கொட்டுவது என்பதில் அரசாங்கம் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. தற்சமயம் ஜாஎல-,ஏக்கல பகுதியில் காணி ஒன்று அடையாளப்படுத்தப்பட்டு அங்கு குப்பைகளை கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் அப் பகுதி மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அதேபோன்று ரயில் மூலமாக குப்பைகளை புத்தளம் மாவட்டத்திற்குட்பட்ட வில்பத்து தேசிய வனத்தின் அருகே கொட்டுவதற்கு 'மெகாபொலிஸ்' அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளன. புத்தளம் மாவட்ட மக்கள் மாத்திரமன்றி சூழலியலாளர்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந் நிலையில் அரசாங்கமும் இது விடயத்தில் உடனடித் தீர்வொன்றைக் காண முடியாத சங்கடத்தை எதிர்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
மீதொட்டமுல்ல குப்பை விவகாரம் தொடர்பில் தான் பல முறை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் எடுத்துக் கூறியும் எந்தவித தீர்வையும் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருப்பினும் அரசாங்கம் பெரும் தலையிடியாக மாறியுள்ள இந்தக் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
குப்பைகளை இன்னொரு இடத்தில் கொண்டு சென்று கொண்டி அங்கும் குப்பை மலைகளை தோற்றுவிப்பதைவிடுத்து மீள்சுழற்சிக்குட்படுத்தல், மின்சாரம் உள்ளிட்ட சக்தி வளங்களை உற்பத்தி செய்தல் போன்ற நவீன திட்டங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும். அதுவே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.