இலங்கை முஸ்லிம்களின் நிலைகண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின், சிறுபான்மை விவகாரங்களுக்கான பிரதிநிதி றீட்டா ஐசக் தெரிவித்தார்.
ஜெனிவாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் 14 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பின் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அனீஸ் ரவூப் தலைமையிலான இந்த சர்வதேச அமைப்பினர் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி, நீதி வழங்குதலில் நிலவும் தாமதம், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றத்தில் உள்ள தாமதம், புறக்கணிப்பு, யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிராக
மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு அவலங்களை சுமந்துநிற்கும் அந்த சமூகத்தினருக்கு அகதிகளுக்கான அந்தஸ்த்து இதுவரை கிடைக்காமை, யாழ்ப்பாண முஸ்லிம் விவகாரத்தில் வடமாகாண சபையின் இழுத்தடிப்பு, பௌத்த சிங்கள இனவாதிகளின் வெறுப்புப் பேச்சு, அதற்கெதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படாமை, அளுத்கம விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை றீட்டா ஐசக்கின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இவற்றை கவனமாக செவிமடுத்து, குறிப்பெடுத்துக்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறுபான்மை விவகார பிரதிநிதி றீட்டா ஐசக், இலங்கை முஸ்லிம்கள் குறித்து தனது பிந்திய அறிக்கையை ஞாபகமூட்டியதுடன், இலங்கைக்கான தனது பயணத்தின் போது இலங்கை முஸ்லிம்களின் நிலைகண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டார்.
அத்துடன் தாம் எதிர்வரும் காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும், தமது பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும், அதனை மேற்பார்வை செய்யவுள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தாம் அவதானிப்பதாகவும், அளுத்கம விவகாரத்தில் நீதி மறுக்கப்பட்டமையை தாம் உணர்வதாகவும் றீட்டா ஐசக் ஒப்புக்கொண்டார்.
சுமார் 40 நிமிடங்கள் நீடித்த றீட்டா ஐசக் மற்றும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கிடையிலான பேச்சின் இறுதியில், பேசப்பட்ட விவகாரங்கள் ஆவண வடிவிலும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வீடமைப்பு உள்ளிட்டவைகள் அடங்கிய விடயங்கள் அறிக்கை வடிவிலும் கையளிக்கப்பட்டன. (நன்றி - விடிவெள்ளி)
