மீதொட்டமுல்லை அனர்த்தம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு


மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவை அடுத்து, இன்னும் 30 பேர் வரையில் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன் இதுவரையில் 29 பேர் உயிரிழந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடி மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது.

அதேநேரம் அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் பாதிப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றையதினம் இடம்பெற்றன. இதற்கிடையில், சம்பவத்தில் உயிரிழந்த 17 பேரின் இறுதி கிரியை இன்று நடைபெற்றது. இதன்போது அனைத்து பல்கலைக்கழக ஒன்றிய மாணவர்கள் சங்கமும் கறுப்புக் கொடி ஏந்தியவாறு இறுதி நிகழ்வில் பங்கேற்றிருந்தது.
அதேநேரம், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கிய சவப்பெட்டியின் தரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதேவேளை, மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நட்ட ஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்காக 25 லட்சம் ரூபாய் வரையில் இழப்பீட்டை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 14ம் திகதி பிற்பகல் 3 மணி அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

0 கருத்துகள்