முஸ்லிம்களை வர்த்தகத் துறையிலிருந்து தூரமாக்கும் நடவடிக்கைகளை இனவாதக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன என்பதற்கு போர்வை நகரில் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதல் சான்றாகும்.
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மீது அரசாங்கம் மௌனித்து இருப்பதே இதற்கு காரணமாகும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
கொடபிட்டிய, போர்வை நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களின் வர்த்தகத்திற்கும் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறியே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. ஆனால் அரசாங்கத்தின் உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டன.
போர்வை நகரில் மூன்று கடைகள் குண்டு வீசி எரிக்கப்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் போன்று முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடராது என்று மேடையில் குரல் கொடுத்தவர்கள், மஹிந்தவை விமர்சித்தவர்கள் இன்று முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்படும்போது பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவரும் கொள்கை முரண்பாடுகளைப் புறந்தள்ளி தேசியபட்டியல், பிராந்திய ரீதியிலான பிளவுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
A.R.A. FAREEL
A.R.A. FAREEL
