இறக்காமம் வாங்காமம் பகுதியில் வழங்கப்பட்ட கந்தூரி உணவு நஞ்சானதில் மூவர் உயிரிழந்தும் ஆயிரக் கணக்கானோர் நோயுற்றுமிருந்த சம்பவம் நாமறிந்ததே. இந் நிலையில் தற்போது அந்த மக்களின் பிரச்சினையை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் இலாபம் தேட முனைவது கவலைக்குரியதாகும்.
இந்த மக்களை உடனடியான காப்பாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த பிரதேச அரசியல்வாதிகள் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் அதன் பிற்பாடு அரசியல்வாதிகள் தரப்பில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக தெரியவில்லை.
நாம் இவ்வளவு பணம் கொடுத்தோம்... வீடு கட்டிக் கொடுப்போம்.. அத்தனை பேருக்கும் நஷ்டயீடு கொடுப்போம்... எமது தலைவர்தான் முதலில் வந்தார்.. எமது கட்சிதான் பாடுபட்டது.. என்றெல்லாம் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளில் விளையாடுகின்ற செயற்பாடாகும்.
எனவேதான் இவ்வாறான போட்டி அரசியலைத் தவிர்த்து மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கூற விரும்புகிறோம்.
