கம்பளையில் கடந்த புதன்கிழமை காணாமல்போன இரண்டரை வயது சிறுவனை மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்கவட்ட வீதி பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த இரண்டரை வயது குழந்தையை கடத்தியமை, சட்ட பூர்வமான பாதுகாப்பில் இருந்து குழந்தையைப் பிரித்தமை, தடுத்து வைத்தமை மற்றும் கப்பம் கோரியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை நேற்று மாலை கணவனும், மனைவியுமான இருவர் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மொத்தம் ஐவர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையுடன் மாயமான, பின்னர் கடத்தலின் பிரதான சூத்திரதாரி என கண்டறியப்பட்ட மாமா உறவு முறை இளைஞர் முஹம்மத் அசாம் மற்றும் குழந்தையை தடுப்பில் வைத்திருந்த இரு பெண்களையுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க கம்பளை மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கடத்தலை குழந்தையை இறுதியாக அழைத்துச் சென்ற மாமா முறை இளைஞரே நடத்தியுள்ளதாகக் கூறும் பொலிஸார் பிறிதொரு குழுவொன்று இதனுடன் தொடர்புற்றுள்ளதைக் கண்டறிந்துள்ளதுடன் அவர்களைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபரின் விஷேட உத்தரவுக்கு அமைய மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, கண்டி –- மாத்தளைப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்க ஆகியோரின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் இரண்டின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான நடவடிக்கைகளை வழி நடத்தும் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ். மெண்டிஸிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ்விரு குழுக்களும் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. அதன்படி ஒரு குழு கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ். கிரிசாந்தவின் கீழும், மற்றைய குழு கம்பளைப் பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த மே 3 ஆம் திகதி பிற்பகல் வேளையில் இக்கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் குழந்தையின் தந்தைக்கு மதிய நேர உணவினை எடுத்துச் செல்லும் வழியில் குறித்த கடத்தல் இடம்பெற்றதாக குழந்தையின் தாயினால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.
மே 3 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், குழந்தையின் தந்தைக்கு மதிய உணவினை அவரது வர்த்தக நிலையத்துக்கு அனுப்ப குழந்தையின் தாய் தீர்மானித்துள்ளார். வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு உட்பட்ட குறித்த வர்த்தக நிலையத்துக்கு மதிய உணவினைக் கொன்டு சென்று கொடுத்துவிட்டு வருமாறு இதன் போது 23 வயதான மொஹமட் அசாம் எனும் இளைஞரிடம் குழந்தையின் தாய் கூறியுள்ளார்.
பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் அவர்களின் உறவினர் என்ற வகையில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அது தொடர்பிலேயே கம்பளையில் உள்ள குறித்த வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந் நிலையில் உணவினை குறித்த இளைஞன் வர்த்தக நிலையத்துக்கு எடுத்துச் செல்ல தயாரான போது 2 வருடங்களும் 8 மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை அந்த இளைஞனுடன் வர்த்தக நிலையம் செல்ல அடம்பிடித்துள்ளது. இதனையடுத்து குழந்தையை தாய் அந்த இளைஞனுடன் அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து மிக அருகில் உள்ள குழந்தையின் தந்தையின் வர்த்தக நிலையத்துக்கு செல்லாமல் குறித்த இளைஞன் குழந்தையைக் கடத்திக் கொண்டு வேறு பிரதேசத்துக்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உணவு வராததால் மீள வீட்டுடன் தொடர்புகொண்டு கணவர் மனைவியிடம் விசாரித்த போதே குழந்தையும் உணவெடுத்து வந்த இளைஞனும் கடைக்குப் போகவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற பின்னர் மதியம் 3 30 மணியளவில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞனின் தொலை பேசியூடாக குறித்த குழந்தையின் தந்தையின் தொலை பேசிக்கு அழைப்பொன்று ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞரும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் தாங்கள் மாலை 6 மணியளவில் மீண்டும் தொடர்பு கொள்வதாகவும் கூறி தொலை பேசியைத் துண்டித்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
எனினும் மீண்டும் தொடர்பு கொள்ளாமையையடுத்து இது குறித்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . இதனையடுத்தே பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமானது.
இந் நிலையில் மறு நாள் காலை வேளையில் குழந்தையின் தந்தைக்கு தொலைபேசி அழைப்பு மீளவும் வந்துள்ள நிலையில் குழந்தையை விடுவிக்க 30 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. இந்தத் தொகை படிப்படியாக குழந்தையின் தந்தையால் 10 இலட்சம் ரூபா வரை பேசி குறைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பொலிஸார் கப்பம் கோர பயன்படுத்தப்பட்ட குழந்தையுடன் மாயமான 23 வயது இளைஞனின் தொலைபேசி அலைகளை மையப்படுத்தி விசாரணைகளை நடத்தினர். இதன் போது கடந்த சனி அன்று அதிகாலை வேளையில் கண்டி பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் பொலிஸாரினால் மீட்கப்பட்டார். இதன் போது பொலிஸார் அந்த இளைஞரை கடத்தல் குற்றச் சாட்டில் கைது செய்தனர். அதுவரை பொலிஸார் நடத்திய சிறப்பு விசாரணைகளில் குழந்தையை அழைத்துச் சென்ற குறித்த இளைஞன் பிறிதொரு கப்பக் குழுவொன்றுடன் தொடர்புற்று கடத்தலை திட்டமிட்டமை தொடர்பில் தகவல்களைச் சேகரித்திருந்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்திய போது, குழந்தை மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வாடி வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழி நடத்தலில் சிறப்பு பொலிஸ் குழுவொன்று மட்டக்களப்பு-– கரடியனாறு –உறுகாமம் கிராமத்துக்குச் சென்றுள்ளனர். குழந்தையின் உயிர் முக்கியம் என விசாரணைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் விசாரணையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தனர். இந் நிலையில் முதலில் மாறு வேடத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக பொலிஸார் கப்பம் கோரியோருக்கு 10 இலட்சம் ரூபாவை வழங்கினர். இதனையடுத்தே வாடி வீடொன்றில் இருந்த குழந்தையை பொலிஸார் மீட்டனர். இதனை அடுத்து உடன் செயற்பட்ட பொலிஸார் அந்த வாடி வீட்டில் இருந்த தாய் ஒருவரையும் அவரது மகளையும் உடன் கைது செய்ததுடன் மீட்கப்பட்ட குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்து அதன் ஆரோக்கியத்தை உறுதி செய்தனர்.
இந் நிலையில் அப்பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் பொலிஸார் வழங்கிய 10 இலட்சம் ரூபாவை பிரதேசத்தின் ஆட்டுத் தொழுவம் ஒன்றுக்குள் இருந்து கைப்பற்றினர். இந் நிலையில் கப்பம் கோரல் விடயத்துடன் தொடர்புடைய பலர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
காத்தான்குடி பொலிஸாரினால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட கணவனையும் மனைவியையும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் குழந்தையின் மாமாவான கடத்தலின் முக்கிய சந்தேக நபரான இளைஞரையும் நேற்று பொலிஸார் கம்பளை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்தனர். இதன் போதே அவர்களை விளக்கமறியலில் வைக்கவும் ஏனையோரைக் கைது செய்யவும் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
