இலங்கை முஸ்லிம் சமூகம் சம காலத்தில் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற போதிலும் அவற்றுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக தோல்விகளையே கண்டு வருகின்றன.
புதிய சட்டத் திருத்தங்கள், வடக்கு கிழக்கில் சிங்களமயமாக்கல், முஸ்லிம்களின் பூர்வீக காணிகளைச் சுவீகரித்தல், இனவாத சக்திகளின் பிரசாரங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வடக்கு கிழக்கில் முளைக்கும் தொல்பொருள் வலயங்கள், எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் கிராமங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்..... என ஏராளமான பிரச்சினைகளை பட்டியலிட முடியும்.
எனினும் இந்த விவகாரங்களுக்கு உரிய மட்டங்களில் பேச்சுக்களை நடத்தி தீர்வினைப் பெற்றுத் தருவதற்கான அரசியல் திராணி தற்போதைய முஸ்லிம் தலைமைகளிடம் இல்லாதிருப்பது கவலைக்குரியதாகும். குறிப்பாக பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் அங்கம் வகிக்கின்ற போதிலும் முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்கள் தொடர்பில் இவர்கள் எந்தளவு தூரம் குரலெழுப்புகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நேற்று முன்தினம் பாராளுமன்றில் உரை நிகழ்த்திய மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, புனித ரமழான் மாதம் நெருங்கி வரும் வேளையில் பேரீச்சம்பழத்தின் மீதான வரியை அதிகரித்து அதன் விலையை உயர்த்தியுள்ளது ஏன் என்றும் இது விடயமாக முஸ்லிம் தலைமைகள் எதுவுமே பேசாது மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பியிருந்தமை இந்த இடத்தில் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
பேரீச்சம்பழ வரி அதிகரிப்பு பற்றி மட்டுமல்ல, மேற்சொன்ன முஸ்லிம் சமூகத்தின் இருப்பில் கை வைக்கின்ற, அடிப்படை உரிமைகளை மீறுகின்ற வியடங்கள் தொடர்பிலும் கூட முஸ்லிம் தலைமைகள் பாராளுமன்றில் பேசத் தயங்குகின்றனர். சமீப நாட்களில் ஓரிருவர் அது பற்றிப் பேசினாலும் அதனால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
முசலியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலம் ஜனாதிபதியினால் வர்த்தமானி பிரகடனம் மூலம் சுவீகரிக்கப்பட்ட நிலையில் அது பற்றி ஜனாதிபதியை நேரில் சந்தித்து தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க முடியாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் உள்ளனர்.
மாறாக தனித்தனி அணியினராக ஜனாதிபதியின் செயலாளரையே சந்தித்து வெவ்வேறு கோணங்களில் இந்தப் பிரச்சினைகளை கையாண்டனர். இவை முஸ்லிம் கட்சிகளிடையேயான அரசியல் போட்டியின் விளைவே அன்றி வேறில்லை எனலாம். அதுமாத்திரமன்றி முசலி விவகாரம் தொடர்பாக ஒரு கட்சியினர் நடாத்திய கூட்டத்தை மற்றொரு கட்சியினர் குழப்புகின்ற அளவுக்கு இன்று முஸ்லிம் அரசியல் சீரழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந் நிலை மாற்றப்பட்டு முஸ்லிம் எம்.பி.க்கள் சமூக நலன்களை முன்னிறுத்தி செயற்படாத வரை மாயக்கல்லியில் மட்டுமன்றி வடக்கு கிழக்கு முழுவதும் சிலைகள் வைக்கப்படுவதையும் விகாரைகள் கட்டப்படுவதையும் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும் என்பதை சொல்லிவைக்க விரும்புகிறோம்.
நன்றி - விடிவெள்ளி பத்திரிகை